இது அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயமான சூரா பாதிஹாவின்
ஐந்தாவது வசனமாகும். இதன் விளக்கத்துக்கு வருவதற்கு முன்னர்
பொதுவாக சூரா பாதிஹாவின் முக்கியத்துவம் அல்லது சிறப்புப் பற்றி
அறிவது நல்லதாகும்.
நபி (ஸல்) அவர்கள் சூரா பாதிஹாவின் முக்கியத்துவம் கருதி வேறு பல
பெயர்களை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள். அந்தவகையில், 'உம்முல்
கிதாப்' (வேதத்தின் தாய்), 'உம்முல் குர்ஆன்' (அல்குர்ஆனின் தாய்),
'அஃளமு சூரதின் பில் குர்ஆன்' (குர்ஆனிலுள்ள மிகுந்த
மகத்துவத்துக்குரிய சூரா), 'கைரு சூரதின் பில் குர்ஆன்'
(குர்ஆனிலுள்ள மிகச் சிறந்த சூரா) என்ற சிறப்புப் பெயர்களை அதற்கு
இட்டதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை எமக்கு
உணர்த்தியிருக்கிறார்கள். 'பாதிஹதுல் கிதாப்' எனப்படும் அல்குர்ஆனின்
தோற்றுவாயாக- நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த சூராவுக்கு
அல்லாஹ் 'அஸ்ஸப்உல் மஸானீ' (தொழுகையில் திரும்பத்திரும்ப
ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்ட சூரா) என்று வேறு ஓர்
இடத்தில் பெயரிட்டிருக்கிறான். (15:87) 'குர்ஆனின் தோற்றுவாயை'
(பாதிஹதுல் கிதாபை) ஓதாதவருக்கு தொழுகை கிடையாது' (புகாரி,
முஸ்லிம்) என்ற நபிமொழி தொழுகையின் ஆணிவேராக அந்த சூரா
இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.